தற்போது வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம்
ஒரு புயலாக வலுப்பெற தேவையான அத்தனை ஏதுக்களையும் கொண்டுள்ளது. பெரும்பாலும் இது புயலாக மாறவே வாய்ப்புண்டு.இது புயலாக மாறினால் ‘நிவார்’ ( Nivar) என்ற பெயரே வழங்கப்படும். இது ஈரான் நாடு இட்ட பெயராகும். இந்தத் தாழமுக்கம் மிக வேகமாக நகர்ந்து வருகின்றது. இதனால் முன்னர் குறிப்பிட்ட திகதிகளுக்கு முன்னதாகவே வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இதன் தாக்கம் இருக்கக்கூடும்.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து 638 கி.மீ. தொலைவிலும், முல்லைத்தீவிலிருந்து 576 கி.மீ. தொலைவிலும் திருகோணமலையிலிருந்து 529 கி.மீ. தொலைவிலும் காணப்படுகின்றது.
தற்போதைய நகர்வு நிலையின் அடிப்படையில் இது தாழமுக்கமாகவே காணப்படுகின்றது. ஆனால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் ஆகக் காணப்படுவதனால் இது மேலும் விருத்தியடையும் வாய்ப்பு அதிகம் உண்டு. மாதிரிகளின் அடிப்படையில் இதன் நகர்வு புதியதாக காணப்படுகின்றது. வடக்கு வடமேற்கு திசையில் கடற்பகுதியில் நகரும் இந்த தாழமுக்கம் புல்மோட்டைக்கு நேராக நிலப்பகுதி நோக்கி நகர்ந்து 23 ம் தித்துக்கு சமாந்தரமாக வடமராட்சி கிழக்கு (24 &25. 11.2020)வரை நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி நகரும்
இன்றைய (22.11.2020 10.30 மு.ப.) நிலையில் திருகோணமலை, முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி கரையோரப்பகுதிகளில் கன மழையும் கடும் காற்றும் வீசக் கூடும். முல்லைத்தீவுக்கு 160 மி.மீ. க்கு கூடுதலாகவும், வடமராட்சி கிழக்கிற்கு 145 மி.மீ. க்கு கூடுதலாகவும் கிளிநொச்சிக்கு 115 மி.மீ. க்கு அண்மித்தும் மழை கிடைக்க வாய்ப்புண்டு.( தாழமுக்க விருத்திக்கேற்ப இவை மாற்றமடையலாம்).
அதே சமயம் எதிர்வரும் 24.11.2020 இல் முல்லைத்தீவில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வேகத்தை விட கூடுதலாகவும், 24,25 &26 11.2020 களில் சாளை, சுண்டிக்குளம், வடமராட்சி கிழக்கு மற்றும் பருத்திதுறை பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. இனை விட கூடுதலாக வீச வாய்ப்புண்டு. வடக்கின் ஏனைய பகுதிகளிலும் இக்காலப்பகுதியில் கன மழையுடன் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும்.
எனவே முன்னெச்சரிக்கையாக எங்கள் வீடுகளுக்கு அண்மித்துக் காணப்படும் கடும் காற்றினால் பாதிக்கப்படும் மரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி எமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம். ( ஏனெனில் கடந்த காலங்களில் கடும் காற்று வீசாமலே வீதியோர மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்து உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன)
– நாகமுத்து பிரதீபராஜா-





